ஜெகமெங்கும் ஜெகஜோதி
🌹 ஜெகமெங்கும் ஜெகஜோதி வீசும்
மா மன்னர் மஹமூதரே......🌹
யா ரஸூலல்லாஹ்!
தங்களின் திருப்பேரரான அஜ்மீர் காஜா நாயகம் தங்கள் புனித ரவ்ழாவில் துயில் கொள்ளும் தருணம்
மா மன்னர் தாங்கள் மையலாக
சொப்பனத்தில் தோன்றி,
எனதரும் அருட்சுடரே அத்தாவுர்ரஸூலே!
யா ஹிந்தல் வலி காஜா ஙரீபன்னவாஜே!
என்றழைத்தீர்,
பல முறை நடந்தேறிய அந்த சொப்பனத்தின் சோபன தாரகையாம் மெஞ்ஞானப் பேரவை ஙரீப் நவாஜ்,
விழித்தெழுந்து
பண்பு பாட்டனர் பயகம்பர் தங்கள் ரவ்ழா முன்பில் அழுது ஆறாய்ப் பெருகி உருகிய விழிகளுடன்,
யா நபியல்லாஹ்!
எனதுயிர் பாட்டனாரே!
எம் பெருமானே!
யான் என் வாநாளை
இனி தங்கள் தவப்பீடமாம்
இந்த அழைப்பிடம் பொன் ரவ்ழாவில் கழித்திடவே பேராவல் கொண்டேனே,
எம்மை இந்தியா செல்லச் சொல்கின்றீரே,
தங்களை விட்டுப் பிரிந்து எங்ஙனம்
யானிருக்க முடியும் எழில்மதியே ஏந்தலரே!
என்றழுது தவிக்க
திருவருட் செல்வர் சிந்தும்
ஒரு துளி கண்ணீரையும்
பொருக்க இயலா
புன்னகையாளர் பூமான் நபிகளார்
பூமணக்கும் ரவ்ழா விரிந்து பொன்முகமாய் எழுந்தருளி,
வெண்ணிலவாய்
நின்றழுத தன்னிகரில்லா தவக்குன்றே!
யா ஹிந்தல்
வலியே! அஞ்சற்க!
எனதுடலை விட்டு எனது ஆன்மா பிரிந்திடுமோ?
ஒரு போதும் பிரியாது,
உத்தம பேரரே!
தாங்கள் இந்தியத்திருநாடு சென்று இறைப்பணியாற்றிடினும்,
உங்களரும் பாட்டனார்
என் பொன்ரவ்ழா உங்களருகே வந்து நிற்கும்,
சென்றிடுவீர் செல்வ நாயகரே!
வென்றிடுவீர் வேந்தரென் பேரரே!
என்று நன்மாறாயக் கனி கொடுத்து அணிசேர்ந்த அமரர்களுடன்
நம் நாடு புனித பயணம் வந்தனர்!
புரட்சி மலர் தெளித்து,
தவ்ஹீத் பானம் கொடுத்து,
பல லட்ஷம் பாமரரை தாமரை நெஞ்சமாக்கி
தீன்மறையில் தஞ்சமாக்கினார்கள்
தாஹாநபி தவப்புதல்வர்!
ஆதலால் மனம் ஏங்கும் கண்மணி நபிக் காதலர்கள் பூம் பொழில் ரவ்ழா காண ஏந்தலின் எழில் பேரர் வாழும் அஜ்மீர் நகர் சென்றும் காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி திருவடியில் தினம் காணலாம் திரு ரவ்ழா!
ஆம்!
அண்ணலர் அரும் பேரர் அஜ்மீரின் ரோஜா,
ஆன்மீக ராஜா
அஜ்மீர் நகர அன்றைய பொழுதில், இவ்வுலக வாழ்வு துறந்து மறுவுலகப் பயண தருணத்தில்,
சற்று திரும்புகையில் விரும்பிய பாட்டனார்,
அன்று அருளியனுப்பிய பரிசுத்த நாவின் பரிவுமிகும்
வாக்கின் படி
தனதூஞ்சல் ரவ்ழாவை அருகில் காட்டி தந்து இருகரமேந்தி திருமேனியணைத்து
இருமேனியும் ஒருமனமொத்து
நறுமண சுவர்கம் ஏகிய அருள்மணம் ஆங்கு நடந்தேறியது!
பூவுக்குள் ஒழிந்திருந்த கனி வெளியாகி அரும்பணியாற்றி
அன்பு தீனை அனந்தம் பேருக்கு ஊட்டி முடித்த பின் திரும்பி விரும்பிய
பூவுக்குள் குடிபுகுந்து கொண்டது!
இன்றும் அஜ்மீர் நகர் செல்லும் பல ஊர் மக்களின் பலமான வாக்குறுதிகள்,
ஆங்கு சென்று அண்ணல் காஜா நாயகம் தர்பார் வாசலில் நின்றால் புனித ரவ்ழாவின் பொன் வாசல் நின்ற
மன நிறைவேற்படுகின்றது!
மகிமைகள் கூடுகின்றது
மகத்துவ மலர்
நமக்கு சூடுகின்றது
என்பதாகும்!
அண்ணலே ஆருயிரே!
யா ஹபீபே ஹுதா!
உங்கள் திருப் பேரர் நாகூர் ஷாஹுல் ஹமீத் பாதுஷா நாயகம் தர்பாருக்கழைத்து ஆசி வழங்கினீர்கள்
அடுத்து,
தங்கள் திங்கள் ரவ்ழாவுமிருக்கு
அந்த எழில்மய அஜ்மீருக்கும் எம்மையழைத்திருங்கள் யாரஸூலல்லாஹ்!......
✍🏻_எம், சலீமாபானு
பிலாலிய்யா ...
No comments