Header Ads

  • Breaking News

    வலிமார்கள்



    கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள். " எனது உம்மத்துக்களில் 40 மனிதர்கள், இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களுடைய இதயத்தைப் போன்ற உள்ளம் படைத்தவர்களாக உலகத்தில் இருந்தே வருவார்கள். அல்லாஹுதஆலா அந்த நபர்களைக்கொண்டு இவ்வுலகத்தில் வாழ்பவர்களின் நோய்களை தீர்த்து வைப்பான். அவர்களுக்காக மழையை பொழிய வைப்பான். அவர்களைக்கொண்டுதான் இவ்வுலகத்தில் உள்ளவர்களுக்கு உதவி புரியப்படும்" என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் தபரானியில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. 


    ஒவ்வொரு காலகட்டத்திலும் உலகத்தில் அவ்லியாக்கள் இருந்து கொண்டே இருப்பார்கள். 


    ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் உலகத்தில் அவ்லியாக்கள் 440 பேர் இருப்பார்கள். அதில் நுஜபாக்கள் 300 பேர், நுகபாக்கள் 70 பேர், அப்தால்கள் 40 பேர், அகியார்கள் 10 பேர், உறபாக்கள் 7 பேர், அன்வார்கள் 5 பேர், அவ்தாத்கள் 4 பேர், முக்தார்கள் 3 பேர், குதுபு ஒருவர். இவர்களில் குதுபே அனைவருக்கும் தலைவராவார். இவரை கௌஸு என்றும் சொல்வார்கள். 


    இப்படி குதுபுகளாக ஒவ்வொரு காலத்திலும் இருந்தவர்கள்தான் காதிரியா தரீக்காவை உருவாக்கிய குத்புல் அக்தாப் கௌஸு அஃலம் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்மாதுல்லாஹி அலைஹி) அவர்கள், ரிஃபாயி தரீக்காவை உருவாக்கிய ஸுல்தானுல் ஆரிஃபீன் ஸையிது அஹ்மதுல் கபீர் ரிஃபாயீ (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள், ஷாதுலி தரீக்காவை உருவாக்கிய இமாம் அபுல் ஹஸன் ஷாதுலி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள், சிஷ்தி தரீக்காவை உருவாக்கிய ஸுல்தானுல் அவ்லியா அஜ்மீர் காஜா முயீனுத்தீன் சிஷ்தி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் மற்றும் நாகூர் ஷாஹுல் ஹமீத் நாயகம் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் ஆவார்கள். 


    இதேபோல் உலகத்தில் பல குதுபுமார்கள் வாழ்ந்தார்கள். இன்றும் வாழ்கிறார்கள். இன்ஷா அல்லாஹ் கியாமத்து நாள் வரை வாழ்வார்கள். படைப்புகள் மீது அவர்கள் ஆட்சி செய்யக்கூடியவர்களாக இருப்பதனால் அவர்களுக்கு "கௌஸு" என்றும் பெயர். இவர்களுக்காகவே அல்லாஹ் வானத்திலிருந்து மழையை பொழியச்செய்கிறான். உலக மக்களுக்கு அல்லாஹ் கொடுத்த ரஹ்மத்துகளை ஒருத்தட்டிலும், குதுபுக்கு கொடுத்த ரஹ்மத்துகளை ஒருத்தட்டிலும் வைத்தால் குதுபுவின் தட்டே பாரமாக இருக்கும். அல்லாஹுதஆலா நபிமார்களுக்கு தனது செய்தியை வஹீ மூலம் அறிவித்தான். அதுபோல் அவ்லியாக்களுக்கு " இல்ஹாம்" என்ற ஞான உதிப்பு மூலம் தெரியப்படுத்துகிறான். 


    அவ்லியாக்கள் நபிமார்களுடைய வாரிசுகளாகும், பிரதிநிதிகளாகவும் இருக்கின்றார்கள். இதை கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் கூறும்போது, " அறிஞர்கள் நபிமார்களின் வாரிசுகள் " என்று கூறினார்கள். இன்னொரு சந்தர்ப்பத்தில் கூறும்போது, " என்னுடைய உம்மத்துக்களிலுள்ள அறிஞர்கள், பனீஇஸ்ராயீல்களிலுள்ள நபிமார்களை போன்றவர்களாவார்கள். " என்று கூறினார்கள். 


    அவ்லியாக்கள் உலக மக்களின் வெளித்தோற்றத்தையும், உள்தோற்றத்தையும் அறிவார்கள் என்று தாஜுல் அவ்லியா, குதுபுல் அக்தாப் ஸைய்யதுனா முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் கூறினார்கள். 


    வலிமார்களின் வணக்கவழிப்பாடுகள் மிகவும் சிறப்புமிக்கது. இதை அல்லாஹ் அஸ்ஸவஜல் கூறும்போது, " அவர்கள் இரவு வேளைகளில் சிறிது நேரமே தூங்குவார்கள். அதிகமான நேரம் இபாதத்திலே ஈடுபடுவார்கள். ஸஹர் நேரத்தில் எழுந்து பாவமன்னிப்பு தேடுவார்கள். இவர்களே வலிமார்கள்" என்று கூறுகிறான். 


    அவர்களின் தொழுகைக்கும் எங்களது தொழுகைக்கும் நிறைய வித்தியாசமுண்டு. நாங்கள் தொழுகையில் நின்றால் கிப்லாவை நோக்கியே நிற்போம். ஆனால் வலிமார்களோ தொழுகையில் நின்றுவிட்டால் அல்லாஹ்வை நோக்கியே நிற்பார்கள். அவர்கள் தொழுகையில் தங்களது உடலை மட்டுமல்ல, உள்ளத்தையும் இறைவனின் பக்கம் நோக்கியே நிற்பார்கள். இத்தகைய பக்குவத்தை அடைந்தவர்களே வலிமார்கள் என அழைக்கிறோம். 


    அதுமட்டுமல்ல, நாமும் நோன்பு நோற்கிறோம், வலிமார்களும் நோன்பு நோற்கிறார்கள். எங்களது நோன்பிற்கும் அவர்களது நோன்பிற்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உண்டு. நாம் நோன்பு நோற்றால் உண்ணாமலும், குடிக்காமலும்தான் இருக்கிறோம். ஆனால் வலிமார்கள் நோற்கும் நோன்பு அப்படிப்பட்டதல்ல. அவர்கள் உண்ணாமலும், குடிக்காமலும் இருப்பதோடு மட்டுமல்ல, உடல் உறுப்புகளையும் நோன்பு நோற்க வைப்பார்கள். எப்படியென்றால் பார்க்க கூடாததை பார்க்காமல் கண்களை தடுத்தார்கள். கேட்க கூடாததை கேட்காமல் காதுகளை தடுத்தார்கள். பேச கூடாததை பேசாமல் நாவை தடுத்தார்கள். இதைப்போன்று முழு உடலையும் தீமையை விட்டும் தடுத்தார்கள். இவர்களே வலிமார்கள். 


    அல்லாஹ் அஸ்ஸவஜல் அல் குர்ஆனில் கூறும்போது, " அல்லாஹ்வின் இறைநேசர்கள் எப்போதும் திக்ரிலே அதாவது அல்லாஹ்வின் தியானத்திலே இருப்பார்கள்." எப்படியென்றால் அவர்கள் நின்றுக்கொண்டு இருந்தாலும், உட்கார்ந்துக்கொண்டு இருந்தாலும், தூங்கினாலும் அல்லாஹ்வின் திக்ரிலே நிலைத்து நிற்பார்கள். இறை தியானத்திலே மூழ்கியிருப்பார்கள். அல்லாஹ் அஸ்ஸவஜல் மேலும் கூறும்போது, " நீங்கள் காலையிலும், மாலையிலும் திக்ர் செய்யும் நல்லடியார்களுடன் நட்புக்கொள்ளுங்கள்" என்று எம்மைப்பார்த்து கூறுகிறான். 


    " அல்லாஹ்வுடைய அவ்லியாக்களை யார் முஹப்பத் வைக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வை முஹப்பத் வைக்கிறார்கள். எவர்கள் அல்லாஹ்வை நேசிக்கிறார்களோ, அவர்களை அல்லாஹ்வும் நேசிக்கிறான். இப்படித்தான் ஸாலிஹீன்களும் அவ்லியாக்களை நேசித்து அவர்களும் அவ்லியாக்கள் ஆனார்கள்" என்று குத்பு ஷஃறானி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் "தபகாத்துல் குப்ரா" என்ற கிதாபில் கூறியுள்ளார்கள்.


    ஆனால் இன்று சில வழிக்கெட்ட கூட்டத்தார்கள் இந்த சிறப்பான வலிமார்களை அவமதித்து, அவர்களிடம் எந்த சக்தியும் இல்லை. அவர்களை ஸியாரத்து செய்யக்கூடாது. அவர்களின் பொருட்டால் வஸீலா கேட்கக்கூடாது. அவர்களுக்காக மௌலிது ஓதக்கூடாது. கந்தூரி கொடுக்கக்கூடாது என்று தப்புத்தவறாக சொல்லி, ஒன்றும் தெரியாத அப்பாவி மக்களை வழிக்கெடுக்கிறார்கள். இவர்களின் பேச்சை நம்பி இந்த அப்பாவி மக்களும் அவர்களின் முன்னோர்கள் செய்த இந்த நல்ல விஷயங்களையெல்லாம் விட்டுவிடுகிறார்கள். ஆனால் விஷயம் தெரிந்த மக்கள் இவர்களின் இந்த பொய் பேச்சுகளை எல்லாம் கேட்பதில்லை. அவர்கள் எமது முன்னோர்கள் செய்து வந்ததைப்போல், வலிமார்களை கண்ணியப்படுத்துகிறார்கள். அவர்களுக்காக மௌலிது ஓதுகிறார்கள். அவர்களின் பொருட்டால் வஸீலா தேடுகிறார்கள். 


    இப்படி இந்த மகத்துவமிக்க அல்லாஹ்வின் வலிமார்களை நேசிப்பவர்களைப் பார்த்து, இன்று சில வழிக்கெட்ட கூட்டத்தார்கள் "ஹுப்பு பாட்டி" என்றும், அவர்களின் துஆ பரக்கத்தை பெற அவர்களின் கப்ரு ஷரீஃபுக்கு செல்பவர்களை பார்த்து "கப்ரு வணங்கி " என்றும் கூறி கேலி செய்து தப்புத் தவறாக பேசி பெரும் பாவத்தை செய்கிறார்கள். 


    அல்லாஹ் அஸ்ஸவஜல் கூறியதாக கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் அறிவிக்கிறார்கள்: " எவன் ஒருவன் எனது வலிமார்களை நோவினை செய்வானோ, அவன் என்னுடன் யுத்தம் செய்ய தயாராக இருந்துக்கொள்ளட்டும்" என்ற இந்த ஹதீஸ் ஸஹீஹுல் புகாரியில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இப்படி அல்லாஹ்வின் எச்சரிக்கை வந்திருப்பதால் நாம் மிகக்கவனமாக இருக்கவேண்டும். வலிமார்களை தவறாகபேசினால் பெரும் பாவத்தை சம்பாதிக்கவேண்டிவரும். அல்லாஹ்வுடன் யுத்தம் செய்ய வேண்டி வரும்.


    இறைநேச செல்வர்களான அவ்லியாக்கள் செய்த கடும் தவம் என்ன? இபாதத்துகள் என்ன? அவர்களைக்கொண்டு இந்த பூமி அடைந்திருக்கும் அதிர்ஷ்டங்கள் என்ன? நல்ல நசீபுகள் என்ன? இவர்களால் தான் மழையையே பொழியவைக்கிறான் என்றால் இவர்களின் சிறப்புதான் என்ன? இவ்வளவு பெரும் மதிப்பு பெற்ற அவ்லியாக்களை அல்லாஹ் நமக்கு தந்திருக்கிறான் என்றால் நாங்கள் எவ்வளவு பாக்கியம் பெற்றவர்கள். இதை நினைத்து நெஞ்சுருகி மனமார அல்லாஹ்வுக்கு நிறைய நன்றி செலுத்த வேண்டும். அதை விட்டு விட்டு அவர்களை கேலி செய்வதால் எவ்வளவு பெரிய பாவங்களை சம்பாதிக்கிறோம்? கிருபையுள்ள அல்லாஹ் நம் அனைவரையும் இந்த வழிக்கெட்ட கூட்டங்களில் சேர்க்காமல், உண்மையான, உறுதியான, வெற்றிப்பெற்ற ஸுன்னத் - வல் - ஜமாஅத்தில் நிலைப்பெற வாழ்த்துகிறோம்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad