அபயம் வழங்குங்கள் அண்ணலரே.....
🌹அபயம் வழங்குங்கள் அண்ணலரே......🌹
எங்கள் இதயம் வாழும் எழிலரசரே எம் பெருமானே!
எவ்வேளையும் உங்கள் ஞாபகம் தான் தாகமாய் தகிக்கின்றது!
எம் சோகத்தில் சுகமளிப்பதும் தங்கள் நினைவு மலரொன்றுதான்!
எந்த நேரத்திலும் இதமளிப்பதும் உங்கள் பால் ஓதப்படும் ஸலவா(ழ்)த்துக்கள் தான்!
பயணத்தில் துணை நிற்பதும் அந்த பரிபக்குவ பாராயணம் தான்!
மரணத்தில் மகிமை செய்யவிருப்பதும் மஹமூதருங்கள் மதிரூபம் தான்!
இரணம் முன் மொழிந்துண்ணுவதும் இன்றியமையாத இனிமை ஸலவாத்து தான்!
எல்லா தருணங்களிலும் தன் காதல் ஹபீபின் மேல் எம்மிறையோதும் ஸலவாத்தை எமக்கும் பங்களித்தமைக்கு அந்த வல்லிறைக்கும் நன்றி பகர்தல் நித்திய நிகழ்தலாகிவிட்டது!
சத்திய ஜோதியே! சமுத்திரங் காணா ஒளிப்பிழம்பே!
பத்தியமாய் யாம் வாழ புத்தியதை புகுத்திடுங்கள்!
சங்கைமிகும் வித்தகரே! இத்தரையின் முத்திரை முகவரியே!
எம் நித்திரை களையச் செய்து பாவத்திரை விலகச்செய்து பரிசுத்த நிறை வழங்கிடுங்கள்!
விரைந்து வந்திடுங்கள் விடிவுதனை தந்திடுங்கள்!
தங்கள் தரிசனம் கண்டவுடன் விழிக்குள் ஒளி புகுந்து இதய இருட்டறை ஒளிரட்டும் !
எம் பாவங்கள் பறந்தோடி தேகமெல்லாம் மிளிரட்டும்!
தங்கள் வந்தனையின் வாசம் கண்டு எம்
சிந்தையெலாம் குளிரட்டும்!
விந்தைமிகும் எந்தையே!
இந்த சந்தையின் கந்தை வாழ்வில்
எம்மை நிந்தனை செய்யும் ஷைத்தான், நஃப்ஸும் வெகுண்டோடட்டும்!
எங்கள் உயிரே!
கண்மணியருளே!
காரணப் பொருளே!
அபயம் வழங்குங்கள்!
அரவணைப்பு தாருங்கள்!
ஆதரவு நல்குங்கள்!
அடைக்கலம் கிடைக்கச் செய்யுங்கள்!........
✍🏻_ எம், சலீமாமானு பிலாலிய்யா.......
No comments