குர்பானியின் தன்மை
*குர்பானி*
இறைவன்
நான்
இந்த இரண்டுக்கும்
போட்டி ஏற்படும்போது
நான்-எனது என்ற தன்மையை
இறைவனுக்கு அர்ப்பணிப்பதே
குர்பானி!
இந்த பூமியில்
இதுவரை பலியிடப்பட்டவை
எத்தனை கோடி ஆடுகள்
மாடுகள் - ஒட்டகங்கள்!
ஆனால்
குர்பானியின் தத்துவம்
உணரப்பட்டதா?
உணர்ந்திருந்தால்
உயிரினங்களைப் பலியிடும்போதே
நாம் - நமக்குள் இருக்கும்
சைத்தான் மீது கல்லெறிந்து
ஆசைகளை
தீயபழக்கங்களை
குர்பானி கொடுத்திருப்போம்!
ஆனால்
நாம் தினமும் கொடுக்கும்
குர்பானிகளோ விசித்திரமானவை!
உறக்கத்திற்காக
*சுபுஹு தொழுகையையும்
வேலை வெட்டிகளுக்காக
மற்ற தொழுகைகளையும்
மிச்சப் படுத்துவதற்காக
ஜகாத் - ஹஜ்ஜையும்
சம்பாதிப்பதற்காக
நேர்மை - நாணயத்தையும்,
பெரிய மனிதனாவதற்காக
நீதியையும்
சுய நலத்திற்காக
வாக்குறுதியையும்
காமத்திற்காக கற்பையும்
*துனியாவுக்காக
*ஆகிறத்தையும்
குர்பானி கொடுத்தோம்!
பெயர் மட்டும்
இபுறாஹீம் - இஸ்மாயீல்
செயல்களில்
*நம்ரூதின் சாயல்!
நல்ல பண்புகளைப்
பொசுக்கி விடுவதற்காக
நமக்குள்ளேயே
நம்ரூதின் நெருப்புக் குண்டம்!
*சுபுஹு : வைகறைத்தொழுகை
*துனியா : இம்மை
*ஆகிறத் : மறுமை
*நம்ரூத் : நானே இறைவன் என்று பிரகடனப்படுத்திய அரசன்
ஓ... முஸ்லிம்களே!
குர்பானி
ஆடு மாடுகளை அறுக்கும் சடங்கல்ல!
ஆசைகளை அறுப்பதற்கான
ஆன்ம ஒத்திகை!
இரத்தத்தை பூமியின் மேல் ஓட்டும்
திருவிழா அல்ல
சித்தத்தை சுத்தப்படுத்தும்
தெய்வீகப் பயிற்சி!
உங்கள் குர்பானி
உயிர்பெற வேண்டுமானால்
*சபா மர்வாவுக்கிடையே
தண்ணீர் தேடியலைந்த
தாய் ஹாஜராவின் தவிப்பு
மகனையே அறுக்கத்துணிந்த
இபுறாஹீம் நபியின் உணர்வு
தன்னை இழக்கச் சம்மதித்த
இஸ்மாயீல் நபியின் தியாகம்
இந்த மூன்றும்
வாழ்வில் ஒருமுறையாவது
நம் நெஞ்சில்
வலம் வரவேண்டும்!
அப்போது தான்
நம்குர்பானி
*கபூலாகும்!
*சபா மர்வா : மக்காநகரில் உள்ள ஓரிடம்
*கபூல் : இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படுவது.
🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹
கவிதை : *கவிஞர் கலீஃபா ஆலிம் புலவர் S.ஹுஸைன் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரிய்யுல் மன்பயீ அவர்கள்* (மறைஞானப்பேழை ஆன்மிக மாத இதழின் ஆசிரியர்)
பகிர்வு : *யாஸீனிய் மௌலவிகள் பேரவை.*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
No comments